Thursday, December 16, 2010

சிவன் பாதியள்



அரியாசனத்தினில் அரனுடன் அமர்ந்து
சரியாசனம் செய்யும் அம்பிகையே!
அரவாசனத்தினில் துயில் கொண்டிருக்கும்
அரியுடை அன்புச் சோதரியே!

இந்திரன் முதலாம் தேவர்கள் யாவரும்
பணிந்திடத் திகழ்ந்திடும் தாமரையே!
சந்திர னைமுடி சூடிய இறையுடன்
வந்தெமைக் காத்திடு தாரகையே!

அருமறைகளும் தினம் போற்றிடும் துதித்திடும்
நாயகியே எங்கள் நான்முகியே!
திருமுறைகளின் அருந் தலைவனை அணையும்
சாம்பவியே எழில் சங்கரியே!

பவமதை ஒழித்திடு தவமதை நல்கிடு
நாரணியே எங்கள் பூரணியே!
எமதுள்ளம் உறைந்திடு நிறைந்தங்கு ஒளிர்ந்திடு
சோதியளே சிவன் பாதியளே!!

No comments:

Post a Comment